பசுமை வேட்டை
Share
Saturday, July 10, 2010 at 7:40am
(மேற்கு வங்க மெதினியூர் மாவட்டத்தில்16.6.2010 அன்று காவல் படையினர் நடத்திய மோதல் படுகொலையில் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் ஒருவரை காவல் படையினர் தூக்கிச் செல்கின்றனர்.)
ஒற்றைக்கண்ணீர்த் துளியொன்று
வீழ்ந்து
பரவுகின்றது வெயிலெனப் பரவிய பூமியின் மேல்
உயிர்களைக் கடந்து
சுட்டுச்சாய்த்த சடலங்களை
குப்பைகளைப் பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்கவேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை கால்களில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக்காற்றின் கடைசி சுவாசத்தி
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவளின் சுரப்பிகளைப் பொசுக்கியிருக்கலாம்
ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்
புதைந்த வானம் குருதிச் சிவப்பாகி யிருக்கலாம்
அதிகாரப் பசியின் கோரம் உயிர்களைத் தின்ன
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுகின்றது
வறுமை
வாழ்வின்மை
சுரண்டல்
இவற்றுக்கெதிரான குரலே
மரணத்திற்கானதாகி விடுகின்றது
ஊழலின் அரசியலை சனநாயகமாக்குவதும்
மக்களின் உயிர்களை மயிரென மதிப்பதும்
மக்களாட்சியெனின்
பசுமை வேட்டை என்பது வேறென்ன
மக்களைக் கொல்வதன்றி.
---
யாழன் ஆதி
தலித் முரசு சூன் 2010
No comments:
Post a Comment