Jul 30, 2010

ராஜபக்சேவுக்கு எப்படி தெரியும்?
Share
எங்க அப்பா ஒரு தீவிரமான கம்யூனிஸ்ட்.
உடனே மாவோயிஸ்டுனு நெனச்சிடக்கூடாது.
சி.பி.எம்.காரர்தான்.
வாடகை வீடுதான் என்றாலும்
எங்கே வீடுமாறிப்போனாலும்
வீட்டுமுன்னாடி ஒரு செவப்புகொடிய நட்டுவச்சுருவாரு.
"அம்மா" மேதினத்தப்போ அந்த கொடிக்குகீழ
அறுவா சுத்தியல் கோலம் போடும்.
தேர்தல் வந்தா போதும்
அப்பப்ப கட்சி வச்சிருக்கிற கூட்டணிக்கு தக
ரெட்டெலையோ உதயசூரியனோ வரைய
காவிச் சட்டியும்,
வெள்ளையடிக்கிற மட்டையுமா கெளம்பிடுவாரு அப்பா.
என்னயும் கூட்டிக்கிட்டுத்தான்.....
அப்பல்லாம் இப்ப மாதிரி
அங்க வரையக்கூடாது இங்க வரையக்கூடாதுன்னுல்லாம் தடையில்ல...
எடங் கெடச்சா எவன்சொவத்துலயும் வரையலாம்.
சில நேரத்துல கூட்டணி கட்சிக்காரங்களோடு சேந்தும் சின்னம் வரைவாங்க...
திடீர்னு திமுக அல்லது அதிமுக முக்கியஸ்தர் ரவுண்டுக்கு வருவார்.
எல்லாருக்கும் டீ வாங்கி தந்துட்டு...
அவங்க கட்சிக்காரங்களுக்கு மட்டும் செலவுக்கு பணம் கொடுப்பார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்காரவுங்களுக்கு டீ மட்டும் தான்.
பணமெல்லாம் கொடுக்கமாட்டாங்க.
கொடுத்தாலும் இவங்க வாங்க மாட்டாங்க.
எங்க அப்பா செத்தபிறகு நண்பன் அரிராமமூர்த்தியோடு நான் சின்னம் வரையப்போன காலம் வரைக்கும் இப்படித்தான்.
இப்போது எப்படின்னு எனக்கு தெரியல...
எனக்கு என்ன சந்தேகம்னா...
இந்த விசயம் எப்படி ராஜபக்சேவுக்கு தெரியும்றதுதான்.

No comments:

Post a Comment